Comments

மாவட்ட செய்திகள்

அழிவின் விளிம்பில் ரஞ்சன் குடி கோட்டை:பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை!

பெரம்பலூர் மாவட்டத்தில், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது 300 ஆண்டுகள் பழமையான ரஞ்சன் குடி கோட்டை அழிவின் விளிம்பில் உள்ளதால்,வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கோட்டையை பாதுகாத்திட அரசுத் தரப்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ரஞ்சன் குடி கோட்டை பல போர்கள் நடந்த சுவடுகளைத் தாங்கி நிற்கும் வரலாற்றுச் சின்னம். இந்தக் கோட்டையின் பெயரைக் கொண்டே ஊரும் அமைந்திருப்பது இதன் தனிச் சிறப்பு. ரஞ்சன்குடி கோட்டை என்பதை  "நஞ்சன்குடி"என்றும் மக்கள் அழைக்கிறார்கள்.

பெரம்பலூரிலிருந்து 17 கி.மீ. வடக்காகவும், இராமநத்தத்திலிருந்து (தொழுதூர்) 8 கி.மீ. தெற்காகவும் உள்ளது. 17 ம்  நூற்றாண்டில் கர்நாடக நவாப்பிடம் ஜாகிர்தாராக இருந்த ஒருவரால் கட்டப்பட்ட கோட்டை இது.மிக அழகாக செதுக்கப்பட்ட கற்களைக் கொண்டு இதன் சுவர்கள் வலிமையாகக் கட்டப்பட்டு உள்ளன.
இக்கோட்டையின் மதில் சுவர்கள் மூன்று அடுக்குகள் கொண்டவையாக வெவ்வேறு உயரத்தில் உள்ளன.

மேலிருந்து பார்க்கும்போது இக்கோட்டை அரைக்கோள வடிவத்தில் இருக்கும். கோட்டை வெளிப்புறத்தில் மதில் சுவர்களை ஒட்டி அகழி இருக்கிறது. அகழிக்குத் தேவையான தண்ணீர் அருகில் உள்ள நீரோடையிலிருந்து கொண்டுவரப்படுகிறது.
அகழி நிறைந்த பின்னர் நீர் வெளியேறி ஒரு சிறிய நீர்பிடிப்பு பகுதி ஒன்றில் சேகரமாகிறது.

இவ்வகழியில் பாதுகாப்பு கருதி,கோட்டை பயன்பாட்டில் இருந்த காலத்தில் முதலைகள் விடப்பட்டிருக்க வேண்டும். இக்கோட்டையின் உள்ளே 2  மசூதிகள் இருக்கின்றன. மேலே ஒன்றும், கீழே ஒன்றுமாக உள்ளன. இதில் கீழே உள்ள மசூதியில் இப்போதும் வழிபாடு நடந்து வருகிறது. ரஞ்சன்குடி கோட்டை கட்டடக் கலையில் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. படிகளின் வழியாக மேலே ஏறிச் சென்றால் "பேட்டை' என்று குறிப்பிடப்படும் இடம் முன்பு போர்புரிந்த இடமாக இருக்க வேண்டும்.

1751-ல் நடைபெற்ற வாலிகண்டபுரம் போரில், இந்தக் கோட்டை ஒரு முதன்மையானப் பங்கு பெற்றுள்ளது என்று வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆங்கிலேயர்களுக்கும், பிரான்ஸ் நாட்டவர்களுக்கும் தொடர்ந்து நடைபெற்ற போரில் இக்கோட்டையைக் கைப்பற்றுவதுதான் வெற்றியைத் தீர்மானிக்கின்ற ஒன்றாக இருந்துள்ளது. ஆரம்பப்போரில் பிரான்ஸ் வெற்றி பெற்றாலும், பின்னர் ஆங்கிலேயர்களே வென்றனர் என்பதை வரலாறு கூறுகிறது.
உச்சிமேல் இருக்கும் பகுதி "கோட்டை மேடு' என்று அழைக்கப்படுகிறது. தூரத்தில் இருந்து வரும் எதிரியைக் கவனிக்கவும், பீரங்கி போன்ற ஆயுதம் கொண்டு குறி பார்க்கவும் சுவர்களில் துளைகள் இடப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் இருந்து பார்த்தால், சுவரின் துளைகள் வழியாக  குறிவைப்பது எதிரிக்குத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைவிட எல்லாவற்றிலும் சிறப்பு, உச்சியில் சிறிய குளம் உள்ளதுதான். இந்தக் குளத்து நீர், நவாபுகளுக்குக் குடிக்கவோ, குளிக்கவோ பயன்பட்டிருக்க வேண்டும். இக்கோட்டைக்குள் குடியிருப்பு மண்டபங்கள், போர்க்கருவிகள் சேமிக்கும் இடங்கள், குதிரை கொட்டடிகள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.
இங்கு ஆண்களையும், பெண்களையும் இறக்கும் வரை சிறைவைக்கும் சிறைகள் இருந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பல்வேறு சுரங்கப்பாதைகள் இருந்ததற்கான அடையாளங்கள் இருக்கின்றன. திருச்சிராப்பள்ளி அருகில் இருப்பதால், அதற்கு தேவையான படைக்கலன்கள் இங்கிருந்துதான் சென்றிருக்க வேண்டும் என்றும், இக்கோட்டை வரலாற்றின் போக்கைத் தீர்மானிக்கும் ஓர் இடமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இப்போது கோட்டைக்கு அருகே மக்கள் குடியிருக்கும் கிராமம் அமைந்துள்ளது. இக்கோட்டையைச் சுற்றி பசுமை போர்த்திய வயல்வெளிகள் காணப்படுகின்றன. இக்கோட்டை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தியாவில் இருக்கும் நினைவுச் சின்னங்களில் இந்த நிறுவனத்தால் மிக மோசமாகப் பராமரிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாக இதுதான் இருக்கும் என்று கூறும் அளவுக்குக் கோட்டையின் நிலைமை இருக்கிறது. இந்த இடத்தைப் பற்றி சிறு குறிப்புகூட இங்கே இல்லை என்பதும்  தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் பலகைகூட சேதமடைந்து உள்ளதும் கோட்டையின் சீரழிவுக்கு உதாரணமாக இருக்கிறது.
தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மிக அருகில் உள்ளதால் தலைச்சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்க வாய்ப்புள்ளது. இது ஒரு வேலூர், திருமயம் கோட்டைகள் போன்று விளக்கம் பெற வேண்டிய ஒன்று. பெரம்பலூர் போன்ற பின்தங்கிய மாவட்டத்தில் உள்ள இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் சிதிலம் அடைந்து வருவது வருந்தத்தக்க ஒன்று. இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம், சுற்றுலாக் கழகம், மாவட்ட நிர்வாகம் உடனடியாக சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்பது இப்பகுதி வாழ் மக்களின் எதிர்பார்ப்பு. 

“ரஞ்சன்குடி கோட்டையை அகழ்வாராய்ச்சி செய்தால் அரிய பல வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கும்” என்கிறார் அந்தக் கோட்டையில் 37 ஆண்டு காலம் காவலராக இருந்த ஹாசீம் பாய். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், " ரஞ்சன்குடி கோட்டை நவாப்புகள் ஆட்சி செய்த இடம். 55 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் இந்தக் கோட்டை வளாகம் இப்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் முறையான பராமரிப்பு இன்றி கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்து வருகிறது என்று தெரிவிக்கிறார் அக்கறையாய். 

“நாங்களும் நவாப் மன்னர்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்தான். ரஞ்சன்குடி கோட்டையை கடைசியாக ஆற்காடு முகமதலி ஆட்சி செய்திருக்கிறார். எனது மூன்றாவது பாட்டனார் பாக் பாபாஜி, நவாப்கள் ஆட்சியில் போர்ப் படைத் தளபதியாக இருந்திருக்கிறார். அவருக்குப் பின்னால் வந்தவர்களும் இந்தக் கோட்டையில் முக்கியமான பொறுப்புகளில் இருந்துள்ளனர்.
சுதந்திரத்துக்கு பிறகு எனது தந்தையாருக்கு இந்தக் கோட்டையை காவல் காக்கும் காவலர் பணி கொடுத்தார்கள். அவருக்குப் பிறகு 1972-ல் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக எனக்கு காவலர் பணி கொடுத்தார்கள். முன்னோர்கள் ஆட்சி செய்த அரண்மனை என்பதால் இந்தக் கோட்டையை எனது வீடு மாதிரிதான் நான் பார்த்தேன்; இன்னமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆர்வத்துடன் கோட்டையைச் சுற்றிக் காட்டுவேன். அப்படி சுட்டிக்காட்டியபோதுதான் மேலே இருந்து தவறி விழுந்து எனது இடது கால் முடமாகிவிட்டது.
மழைக்காலங்களில் இந்தக் கோட்டைப் பகுதியில் காலாற நடக்கும்போது அந்தக் காலத்துச் செப்புக் காசுகளை ஏராளமாக கண்டு எடுத்திருக்கிறேன்.   பாண்டியர்கள், சோழர்கள், விஜய நகரப் பேரரசர்கள்,முகலாயர்கள், பயன்படுத்திய காசுகள் எல்லாம் என் கைக்குக் கிடைத்து அவைகளை பள்ளிக்கூடத்துப் பிள்ளை கணக்காய் சேர்த்து வைத்திருந்தேன். எம்.ஜி.ஆர். காலத்தில் மாநில தொல்லியல் துறை இயக்குநராக இருந்த நாகசாமி, நான் சேமித்து வைத்திருந்த காசுகளை தரும்படி கேட்டார். அப்போது எனக்கு இதன் அருமை தெரியவில்லை. நான் சேமித்து வைத்திருந்த முக்கால் படி செப்புக் காசுகளை அவரிடம் எடுத்துக் கொடுத்தேன்.

அவருக்குப் பிறகு நடனகாசிநாதன் இயக்குநராக இருந்தபோதும் என்னிடம் இருந்த காசுகளை கேட்டு வாங்கினார். இவர்கள் இருவருக்கும் கொடுத்த பிறகு சேமித்த காசுகளைத்தான் இப்போது நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். இப்போதும் வாரம் ஒருமுறை ரஞ்சன்குடி கோட்டைக்குச் சென்று அதன் அழகை ரசித்துவிட்டு வருவேன். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கோட்டையில் பல பகுதிகள் மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன.

எனக்கு தெரிந்தே கோட்டைக்குள் 11 கிணறுகள் இருந்தன. அவை அத்தனையும் இப்போது மண் மூடிவிட்டது. அந்தக் கிணறுகளுக்குள் பாதுகாப்புக் காரணங்களுக்காக நவாப் தளபதிகள் போர் கருவிகளைப் பதுக்கி வைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. அந்தக் கிணறுகள் இருந்த இடமும் கோட்டைக்குள் புதைந்துபோன இன்னும் சில முக்கியமான பகுதிகளும் எனக்கு மட்டும்தான் தெரியும்.
அவற்றை எல்லாம் தோண்டி எடுத்து அதனுள்ளே உள்ள வரலாற்றுத் தடயங்களை வெளிக் கொண்டு வரவேண்டும். அதற்காக, நான் உயிருடன் இருக்கும் காலத்திலேயே என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தொல்லியல் துறைக்கு பலமுறை கடிதம் எழுதினேன். எந்த நடவடிக்கையும் இல்லை. தொன்மையான இந்தக் கோட்டைக்குள் புதைந்திருக்கும் வரலாற்றுத் தடயங்களை வெளியில் கொண்டுவர முழுமையான அகழ்வாராய்ச்சி செய்யப்பட வேண்டும். இந்தக் கோட்டையை சுற்றுலா தலமாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று உருக்கமாக பேசுகிறார் ஹாசீம் பாய்.

தமிழகத்தின் வரலாற்றுப் பொக்கிஷமாகத் திகழும் இக்கோட்டை, போதிய பராமரிப்பின்றி அழிந்து வருகிறது. எனவே, அழிந்து வரும் இந்த வரலாற்று சிறப்புமிக்க நினைவுச்சின்னத்தை பாதுகாக்க அரசு உரிய  நடவடிக்கைகைகளை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை.

விகடன்.காம்

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.