சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு ஒரே மாதத்தில், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரை மழைக்கு ஒழுகுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். சின்ன மழைக்கே தாக்கு பிடிக்காத நிலையில் மெட்ரோ ரயில் நிலையத்தின் தரம் இருப்பதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கோயம்பேடு-ஆலந்தூர் இடையே கடந்த மாதம் 29ம்தேதி முதல் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் மக்கள் ஆர்வத்துடன் பயணித்த நிலையில் தற்போது பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் மட்டும் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.
கட்டணம் அதிகமாக இருப்பதினாலேயே பயணிகள் கூட்டம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.மிகவும் நவீன வசதிகளுடன் அதிக பொருட் செலவில் வெளி நாட்டுத் தரத்துடன் கட்டப்பட்டுள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் சாதாரண மழைக்கு கூட தாங்காமல் ஒழுகி வருவதும் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தேங்கும் தண்ணீர்
கோயம்பேடு, வடபழனி, அசோக்நகர் பகுதிகளில் நேற்று 3 செ.மீ அளவுக்குதான் மழை பெய்தது. ஆனால் இந்த மழைக்கே மெட்ரோ ரயில் நிலையங்களில் பல பகுதிகளில் மழை தண்ணீர் ஒழுகியது.
பயணிகள் அவதி
மேல் கூரை தரமானதாக இல்லாத காரணத்தால் மழை தண்ணீர் ஒழுகி படிக்கட்டுகளில் சிதறியது. இதனால் கிரானைட் போடப்பட்ட படிகளை பயன்படுத்திய பலர் வழுக்கி விழும் நிலை ஏற்பட்டது.
பக்கெட் வைத்த நிர்வாகம்
அது மட்டுமல்லாது மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் மழை நீர் அதிகம் வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனத். கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய படிகளில் கூரையில் இருந்து வழியும் தண்ணீரைப் பிடிக்க மெட்ரோ நிர்வாகத்தினர் பெரிய பக்கெட்டுகளை வைத்திருந்தனர்.
வயதானவர்கள் எச்சரிக்கை
மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆங்காங்கே மழை தண்ணீர் தேங்கியிருக்கிறது. கிரானைட் தரை என்பதால் வயதானவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செல்லவேண்டும்" என்று பயணிக்க வந்த பயணிகள் தெரிவித்தனர்.
நன்றி: ONE INDIA
நன்றி: ONE INDIA
0 comments:
Post a Comment