நாளொன்றுக்கு மூன்று மணி நேரத்துக்கும்
மேலாக தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு முன்கூட்டியே இறப்பதற்கான அபாயம்
இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
எனவே, நாளொன்றுக்கு இரண்டு மணி
நேரத்துக்கும் குறைவாக இளம் வயதினர் தொலைக்காட்சி பார்க்க வேண்டும்
என்றும், உடல் உழைப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் பரிந்துரை
செய்துள்ளனர்.
இதுகுறித்து தங்கள் குழு ஆய்வு நடத்தியதாக,
ஸ்பெயினில் உள்ள நவாரா பல்கலைக்கழக பேராசிரியர் மிகுவல்
மார்ட்டினெஸ்-கான்சலஸ் என்பவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் மருத்துவ
இதழுக்கு அவர் அளித்த பேட்டியில்; தொலைக்காட்சி பார்க்கும் நேரத்திற்கும்,
மரணம் ஏற்படும் விகிதத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்த ஆய்வுகளின்
அடிப்படையில் மேற்கூறியதை தெரிவிக்கிறோம்.
அதிக நேரம் தொலைக்காட்சியை பார்ப்பது
சோம்பலுக்கும் வழிவகுக்கிறது. தொலைக்காட்சி பார்க்கும் நேரம், கணினியில்
செலவிடும் நேரம், வாகனம் ஓட்டும் நேரம் ஆகிய மூன்று விதமான செயல்களில்
ஆய்வு மேற்கொண்டோம்.
ஸ்பெயின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சராசரி
37 வயதுள்ள 13,284 பட்டதாரிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிக நேரம்
தொலைக்காட்சி பார்த்தவர்களில் எட்டு ஆண்டுகளில் 19 பேர் இதய பாதிப்பாலும்,
46 பேர் புற்றுநோயாலும், 32 பேர் மற்ற காரணங்களாலும் உயிரிழந்துள்ளது
எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதில், நாளொன்று ஒரு மணி நேரத்துக்கும்
குறைவாக தொலைக்காட்சி பார்த்தவர்களை விட, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக
தொலைக்காட்சி பார்த்தவர்களுக்கு இரு மடங்கு உயிரிழப்பு அபாயம் இருந்ததாக
ஆய்வில் தெரியவந்துள்ளது என்று மிகுவல் மார்ட்டினெஸ்-கான்சலஸ்
தெரிவித்தார்.
0 comments:
Post a Comment