Comments

நோன்பு

ரமளானை வரவேற்போம்














கண்ணியமும் மகிமையும் வாய்ந்த வல்ல ரஹ்மான் தன் திருமறையில கூறுகிறான்: 


இந்த குர்ஆன் ரமழான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும்.(அல்குர்ஆன் 2:185)

மனிதகுல மாணிக்கம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
யார் நம்பிக்கைக் கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமழான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். (அபுஹூரைரா(ரலி) புகாரி37)
கோடையின் கடுமை நம்மை தாக்கிக் கொண்டிருக்கும் சூழலில் இவ்வருட ரமழானை இன்ஷாஅல்லாஹ் சந்திக்க உள்ளோம். இடைநிலை கடைநிலை ஊழியர்கள் எல்லாம் ஒருவித தவிப்போடு ரமழானின் நோன்பை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதை பரவலாக நாம் பார்த்து வருகிறோம். காலத்தை படைத்து அதன் சுழற்சியை தன் கையில் வைத்திருக்கும் கருணையாளனாகிய அல்லாஹ் இந்த கடின கோடையை சந்திக்கும் ஆற்றலையும் நமக்கு வழங்குவான். உணவுகள் மட்டுமல்லாது நம் உள்ளத்திற்கும் வழங்கும் திடமும் ஆற்றலுமே நோன்பு நிறைவு செய்ய உதவுகிறது. எனவே சகோதர சகோதரிகள் தட்பவெட்ப சூழ்நிலைகளுக்கு பயந்து அலட்சியங்களக்கோ பலவீனங்களுக்கோ இடம் தந்துவிட வேண்டாம்.
ரமழான் மகத்தான அல்லாஹ்வின் அருட்கொடை. மனித இனம் தனது குற்றங்களிலிருந்தும்,பாவங்களில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, தன்னைப் படைத்த இரட்சகனின் திருப்பொருத்தத்தின் நெருக்கத்தை இலகுவாகப் பெற்றுதரும் இனிய தினங்கள் நிறைந்ததே ரமழான்.
இஸ்லாத்தின் பெயரால் பிரிவுகளும், மாறுபட்ட சிந்தனைகளும் தோற்றுவிக்கும் குழப்பங்களிலிருந்து மனித குலம் நீங்கிட அல்லாஹ்வின் ஒருவழியை மட்டும் தெளிவுப்படுத்தும் பேரொளிமிக்க திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதம் ரமழான்.
உள்ளும் புறமும் எந்தவொரு அடையாளத்தைக் கொண்டும் நம்மால் இனங்கான முடியாமல் உணர்வுகளாலேயே இறைக்கருணையின் பக்கம் அடியார்களை இழுத்துச் செல்லும் அற்புத வணக்கமே நோன்பு.
அது பிற நாட்களில் நோற்பதை விட குறிப்பிட்ட இம்மாதத்தில் நோற்பது இறைமார்க்கத்தை நிலை நிறுத்தும் கடமையும் ஏக இறைவனுக்குப் பிரியமான அம்சமும் ஆகும்.
இறையச்சம் இல்லாத அமல்கள் எதற்கும் பயன் அளிக்காத விழலுக்கு நீர் இறைப்பது போன்றதாகும். ஒட்டு மொத்த வாழ்வையும் இறையச்சத்திற்கு அப்பாற்பட்டு தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு ரமழானின் நோன்பு இறையச்சத்தை புனரமைத்துக் கொள்ள உதவும் கண்ணியமிக்க கருவியாகும்.
தீங்கான எண்ணங்களும் மனோஇச்சைகளும் மனிதர்களை அது ஆணாயினும் பெண்ணாயினும் ஆட்டிப் படைக்கின்றது. ஈமானுக்கு ஏற்படும் மிகப் பெரிய நோவினை இதுதான். ஈமானுக்கு நோவினை என்றால் மனிதன் என்னதான் பிற வளங்கள் பெற்றிருந்தாலும் பயனற்ற வாழ்வுக்கு தான் பலியாகி விடுவான். 
நமக்குள் இருந்துக் கொண்டே நம் வாழ்வை வேரறுக்கும் தீய ஊசலாட்டத்தின் ஆணிவேரை அடையாளம் கண்டு அறுத்தெரியும் ஆண்மீகப் பயிற்சி தான் நோன்பு.
மகத்தான இரட்சகனின் நேசமும் மறுமையில் நற் பயனும் பெற்றிட வழிகாட்டும் வசந்தமே ரமழான் மாதம்.
கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.(2:183)
இந்த நோன்பை அல்லாஹ் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டும் கடமையாக்கவில்லை மாறாக முன் சென்ற சமுதாயத்திற்கும் கடமையாக்கி உள்ளான்.
இந்த வசனத்தில் நாம் இறையச்சம் உடையவர்களாக வேண்டும் என்பதற்காகவே நோன்பு கடமையாக்கப்பட்டு உள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான். 
எத்தனையோ ரமழான் மாதங்களை நாம் அடைந்து உள்ளோம். அந்த ரமழான் மாதங்களில் நாம் நோன்பு நோற்றுள்ளோம். ஆனால் அல்லாஹ் எதிர்பார்க்கக்கூடிய அந்த இறையச்சம் நம்மிடம் ஏற்பட்டு உள்ளதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்
இறையச்சம் என்பது இறைநம்பிக்கையாளனின் உயிர் நாடியாக இருக்க வேண்டும். அவனுடைய ஒவ்வொரு செயலிலும் எல்லா நேரங்களிலும் இந்த இறையச்சம் வெளிப்பட வேண்டும்.
ஒரு இறைநம்பிக்கையாளன் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றிருக்கும்போது தீமையான பேச்சுக்களைப் பேசாமல், மோசடி செய்யாமல், தீமையான காரியங்களில் ஈடுபடாமல் அந்த மாதம் முழுவதும் இறைவனை அஞ்சி நடக்க வேண்டும் என்று எண்ணி அனைத்துத் தீமைகளை விட்டும் விலகி இருக்கிறான்.
அந்த ரமழான் மாதம் முடிந்து விட்டாலோ அவன் மீண்டும் தீமையான காரியங்களைச் செய்யத் துவங்கி விடுகிறான். ஏனெனில் அந்த நோன்பு அவனிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
இறையச்சம் இந்தவொரு மாதத்தில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்றோ அம்மாதம் முடிந்து விட்டால் என்ன வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம் என்றோ இறைவன் கூறவில்லை. இறையச்சம் என்பது ரமழான் மாதத்திற்கும் மற்ற 11 மாதங்களுக்கும் பொதுவானதுதான். எனவே எல்லா நாளிலும் ஒருவரிடம் இறையச்சம் பிரதிபலிக்க வேண்டும்.
ரமழான் மாதத்தில் ஒருவன் நோன்பு நோற்றிருக்கும் போது அவனுக்கு அருகில் அவனுடைய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட அவனுக்குப் பிடித்தமான உணவுகள் இருக்கும். அவனுடைய மனைவி இருப்பாள். தான் விரும்பியதை அவன் செய்யலாம். யாரும் கேட்க மாட்டார்கள். எனினும் நாம் இறைவனுக்காக நோன்பு நோற்றுள்ளோம். எனவே நமக்கு தடுக்கப்படாத பொருளாக இருந்தாலும் இப்போது நமக்கு தடுக்கப்பட்டுள்ளது என்ற விளங்கி தவிர்ந்து இருக்கிறார்கள்.
மேலும் ரமழான் மாதத்தில் நம்மால் முடிந்த அளவு ஏதேனும் உணவை தயாரித்து ஏழை எளியவருக்குக் கொடுப்போம். ஆனால் ரமழான் முடிந்து விட்டாலோ அந்த ஏழை எளியோரைப் பற்றி நாம் கவலைப்படுவதே இல்லையே! ஏன்? என்று நமக்கு நாமே கேட்டு ரமழான் அல்லாத நாட்களிலும் உணவளிக்க வேண்டும் என்ற உணர்வை அல்லாஹ்வுக்காக நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதுவும் இறையச்சத்தின் ஓர் சாரம்சமாகும். இதற்காகவே நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்று இறைவன் கூறுவதை பேணிக் கொள்ள வேண்டாமா?
இறைவன் ஹலாலாக்கிய நம்முடைய பொருளாக இருந்தாலும் அதை இறைவன் தடுத்து விட்டான் என்பதால் அவனுக்கு அஞ்சி நாம் தவிர்ந்து இருக்கிறோம். அப்படியென்றால் அடுத்தவருடைய பொருள் நமக்கு ஒரு போதும் ஹலால் ஆகாது. எனவே நாம் யாரையும் ஏமாற்றக் கூடாது. யாருக்கும் மோசடி செய்யக் கூடாது என்ற இறையச்சம் நம்மிடம் வர வேண்டும். இந்த இறையச்சம் வருவதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்று இறைவன் கூறுகிறான்.
நோன்பின் மூலம் இவ்வலகில் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு அல்லாஹ்விடம் என்ன கிடைக்கும்?. வேறு எந்த நல்லறத்துக்காகவும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிடமிருந்து நமக்கு கிடைக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை பரிசு வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே பரிசளிப்பேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபுஹூரைரா(ரலி) முஸ்லிம் 2119)
மற்ற எந்த வணக்கத்தையும் விட நோன்பு அதிகமான பரிசுகளைப் பெற்றது என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.
நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய்வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியை விடச் சிறந்ததாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபுஹூரைரா(ரலி) புகாரி 1894)
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு திறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனை சந்திக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும். (அபுஹூரைரா(ரலி) புகாரி 1904)
படைப்பினங்கள் பசி பொறுக்காதது. உணவின் தேவை அவைகளுக்கு அத்தியாவசியமாகும். படைத்த இறைவனுக்காக பசியையும் உணர்வுகளையும் அடக்கி அவன் குறித்த நேரத்தில் நோன்பு திறக்க உணவு உண்ணும்போது ஏற்படும் மகிழ்சி ஒன்று!
மறைபொருளாக இருக்கும் இறைவன் உணர்த்திய வாழ்வினை அவனை காணாமலேயே பூமியில் வாழ்ந்து நிலையான மறுமை நாளில் எத்தனையோ எதிர்ப் பார்ப்புகளுடன் அந்த மகத்தான இறைவனை சந்திக்கும் தலையான சம்பவம் ஏற்படுத்தும் மகிழ்ச்சி இருக்கிறதே! அல்லாஹூ அக்பர்! மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்காக இதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்.
யார் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும் மறுமைப் பயனை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். (அபுஹூரைரா(ரலி) புகாரி 1901)
பாவம் செய்யாதவர்கள் யாரும் கிடையாது. அனைத்து பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைப்பதென்பது சாதாரண விஷயமல்ல. நோன்பின் மூலமாக இவ்வளவு பெரிய பாக்கியங்கள் கிடைப்பதால் நோன்பு நோற்பதில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழியில் மட்டும் நமது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்புரிவானாக!

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.