Comments

பாக் கிரிக்கெட் அணியை ஆதரிப்பது குற்றமா ?

காஷ்மீர் மக்களின் தேசிய இனப் போராட்டத்தை தீவிரவாதமாகவும், பாக் சதியாகவும் மட்டும் பார்க்க பழக்கும் அரசு – ஊடகங்களின் செல்வாக்கு, வட இந்தியாவில் அதிகம். அதனால் எங்கு சென்றாலும் காஷ்மீர் மாணவர்கள் இத்தகைய வன்மத்துடன்தான் பார்க்கப்படுகின்றனர் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.
ஷாகித் அப்ரிடி
பாக் அணியின் அப்ரிடி ஒரு சிங்கம் போல கடைசி ஓவரில் இரண்டு சிக்சர் அடித்து இந்தியாவை தோற்கடிக்க வைத்தார்.
சு வாமி விவேகானந்தா சுபார்த்தி எனும் தனியார் பல்கலைக் கழகம் உபி மாநிலம் மீரட் நகரில் உள்ளது. இங்கு படிப்பவர்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட காஷ்மீர் மாணவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் நிரந்தர ஆக்கிரமிப்பு போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் காஷ்மீரில் கல்வி, அதுவும் உயர் கல்வி கற்பது என்பது பல்வேறு காரணங்களால் கடினமானது. கல்லூரிகளும் அதிகம் இல்லை. இதன் பொருட்டு காஷ்மீர் மாணவர்கள் அருகாமை வட இந்திய மாநிலங்களில் படிக்கச் செல்கின்றனர்.
சுபார்தி பல்கலைக் கழகத்தில் கடந்த ஞாயிறு 2.3.2014 அன்று மாணவர்கள் அவர்கள் தங்கியிருக்கும் மதன் திங்கரா விடுதியில் கிரிக்கெட் போட்டியை பார்த்திருக்கின்றனர். வங்கதேசத்தில் நடக்கும் ஆசியக் கோப்பைக்கான லீக் சுற்று போட்டி ஒன்றில் இந்தியாவும், பாக்கும் மோதி அதில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தப் போட்டி நடக்கும் போது காஷ்மீர் மாணவர்கள் பாகிஸ்தான் அணியை ஆதரித்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் இந்தியா வெற்றிபெறும் நிலையில் ஆட்டம் இருந்ததால் ஏனைய ‘இந்து-இந்தியா’ மாணவர்கள் காஷ்மீர் மாணவர்களின் குரலை கண்டு கொள்ளவில்லை. ஆனால் இறுதியில் பாக் அணியின் அப்ரிடி ஒரு சிங்கம் போல கடைசி ஓவரில் இரண்டு சிக்சர் அடித்து இந்தியாவை தோற்கடிக்க வைத்தார். இதை  காஷ்மீர் மாணவர்கள் கைதட்டி கொண்டாடியிருக்கிறார்கள்.
போதாதா, இந்து மாணவர்களுக்கு சினம் ஏறி காஷ்மீர் மாணவர்களை தாக்கியிருக்கிறார்கள். பத்து மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டிருக்கின்றனர். மூத்த மாணவர்கள் தலையிட்டு காப்பாற்றவில்லை என்றால் சில காஷ்மீர் மாணவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று அங்கு படிக்கும் காஷ்மீர் மாணவர் ஒருவர் கூறியிருக்கிறார். பிறகு காஷ்மீர் மாணவர்களின் விடுதி சன்னல்களை தாக்கி, உடைத்து இரவு முழுவதும் அச்சுறுத்தியவாறே இருந்திருக்கிறார்கள். காலையில் பல்கலைக்கழக வளாகத்தில் “காஷ்மீர் மாணவர்களை வெளியேற்று” என்று முழக்கமிட்டபடியே இந்து-இந்திய மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றனர்.
ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களை பெரும்பான்மையாகவும் விவேகானந்தரை பெயரிலும் கொண்டிருக்கும் பல்கலைக் கழக நிர்வாகம் என்ன செய்திருக்கும்? ‘இந்திய’ மாணவர்களின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்த நிர்வாகம் காஷ்மீர் மாணவர்கள் பலரை வளாகத்தை விட்டே வெளியேற்றியிருக்கிறது. அல்லது விரட்டியிருக்கிறது என்றும் சொல்லலாம். மேலும் எந்தக் காரணமோ விளக்கமோ அன்றி ரூ 5,000 அபராதமும் இம்மாணவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது.
இம்மாணவர்களை அண்டை மாநிலங்களில் படிப்பதற்கு ஏற்பாடு செய்து அனுப்பும் “காஷ்மீர் கன்சல்டன்சி” நிறுவனத்தை சேர்ந்த ராபியா பாஜி, இந்த சம்பவம் குறித்து தனக்குத் தெரியவில்லை என்றாலும் அன்று மாலை பல்கலையின் தலைவர் அதுல் கிருஷ்ணா அனுப்பியிருக்கும் மின்னஞ்சல் குறித்து தெரிவித்திருக்கிறார்.
அதில் “ இந்த ஆண்டிலிருந்து காஷ்மீர் மாணவர்களுக்கு இடம் கொடுப்பதாக இல்லை, வேண்டுமானால் காஷ்மீர் மாணவர்கள் படிப்பதற்கு பாகிஸ்தான் செல்லலாம்” என்றும் கூறப்பட்டிருப்பதாக ராபியா தெரிவித்தார்.
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் வெறி
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் வெறி
இதே போன்று பஞ்சாப் மாநிலத்தில் தேசி பகத் பல் மருத்துவக் கல்லூரியிலும் காஷ்மீர் மற்றும் ‘இந்திய’ மாணவர்களிடையே இந்த கிரிக்கெட் போட்டியை வைத்து சச்சரவு எழுந்திருக்கிறது. எனினும் விவேகானந்தர் போல பகத் நிர்வாகம் மாணவர்களை வெளியேற்றவில்லை.
விவேகானந்தா பல்கலைக் கழகத்தில் மொத்தம் 67 மாணவர்கள் வெளியேற்றப்பட்டு காஷ்மீர் அனுப்பப்பட்டதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது. மேலும் அந்த செய்தியில், பல்கலையின் துணை வேந்தரான டாக்டர் மன்சூர் அகமது, “இத்தகைய நடைமுறைகளை மேற்கொள்ளும் மாணவர்களை நாங்கள் எப்போதும் அனுமதிப்பதில்லை” என்றும் தெரிவித்திருக்கிறார். காஷ்மீர் மாணவர்கள் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டதாக சக மாணவர்கள் புகார் அளித்ததாக கூறும் அகமது அவர்களை மீது மட்டும் நடவடிக்கை எடுக்க நினைத்ததாகவும், அந்த மாணவர்கள் யார் என்று மற்ற காஷ்மீர் மாணவர்கள் தெரிவிக்க மறுத்ததால் 67 பேர்களை வெளியேற்றியதாகவும் கூறியிருக்கிறார்.
அந்த மாணவர்கள் மன்னிப்பு கேட்பார்கள் என்று எதிர்பார்த்தாகவும் அது நடக்கவில்லை என்பதாலேயே இந்த் தற்காலிக நீக்கம் எடுக்க நேரிட்டது என்று அகமது நியாயப்படுத்துகிறார்.
கிரிக்கெட்டில் வெற்றி பெறும் பாக் அணியை இந்திய முசுலீம்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள் என்று இந்துமதவெறி அமைப்புகள் இந்தியாவெங்கும் உருவாக்கியிருக்கும் ஒரு அவதூறும், வெறுப்புணர்வும் கலந்த கருத்து, நெடுங்காலம் செல்வாக்கோடு இருக்கிறது. முதலில் இது உண்மையல்ல. இங்கிருக்கும் முசுலீம்கள் எவரும் இந்தியாவைத்தான் தமது நாடாக கருதுகின்றனரே அன்றி பாக்கை அல்ல.
முசுலீம் என்றால் மதம்தான் முக்கியம், தேசிய இனம், மொழி, நாடு, வர்க்கம், பால் என்பதெல்லாம் அப்புறம்தான் என்ற கருத்து முதன்மையாக ஏகாதிபத்திய ஊடகங்களால் பரப்பப்படுகிறது. அமெரிக்காவின் இளவல் சவுதி புரவலராக இருந்து உருவாக்கிய இசுலாமிய மதவாதிகள் கூட அப்படித்தான் கூறுகிறார்கள். ஆனால் அத்தகைய மதம் சார்ந்த இசுலாமிய சகோதரத்துவம் இந்த உலகில் எப்போதும் இருந்ததில்லை. காரணம் ஒரு மனிதன் அல்லது சமூகத்தின் பிரச்சினைகள் அனைத்தும் கடவுள் நம்பிக்கை அல்லது மதத்தோடு தொடர்புடையவை அல்ல.
மேலும் குறிப்பிட்ட மக்களை ஒடுக்கும் இன-மத-ஏகாதிபத்திய ஒடுக்குமுறையாளர்கள் அனைவரும் ஒடுக்குபவர்கள் குறித்த துவேசத்தை கிளப்புகிறார்கள். தேவையென்றால் அமெரிக்கா தன்னை இசுலாத்தின் புனிதனாக காட்டிக் கொள்ளும். தேவையில்லை என்றால் இசுலாத்தின் பிற்போக்குத்தனத்தைக் கண்டிக்கும்.
இப்படித்தான் இந்தியாவில், பார்ப்பன இந்துமதவெறி இயக்கங்களால் இந்த கிரிக்கெட் பிரச்சினையில் மதம் திணிக்கப்பட்டது. இந்திய முசுலீம்கள் அனைவரும் இந்துமதவெறியர்கள் உருவாக்கியிருக்கும் அவதூறுகளை அன்றாடம் சந்தித்தபடியேதான் வாழ்கிறார்கள். மேலும் குஜராத் போன்ற நாடறிந்த கலவரங்கள் வரும் போதும், அதில் இந்துமதவெறியர்களை ஜனநாயகத்தின் படியே தண்டிக்க முடியாது என்று இந்த நாட்டின் அரசியல்-நீதி அமைப்புகள் நிரூபிக்கும் போது ஒரு கோபம் கொண்ட இசுலாமிய இளைஞன் சுலபமாக தீவிரவாதத்தின் பக்கம் போக முடியும். அப்படி போக முடியாமலும், அதே நேரம் இந்த நாட்டின் மீது தனது அதிருப்தியை காட்ட வேண்டும் என்று விரும்பும் ஒரு இசுலாமிய இளைஞன் பாக் கிரிக்கெட் அணியின் வெற்றிக்காக கை தட்டுவதற்கு வாய்ப்பிருப்பதை அனைவரும் உணர வேண்டும். எனினும் அப்படி அநேகம்பேர் கைதட்டுவதில்லை.
ஆனால் விளையாட்டில் அரசியலும், தேசபக்தியும் நுழைந்தது எப்படி?
இந்த உலகில் விளையாடப்படும் அனைத்து அணி விளையாட்டுகளிலும் அதன் போட்டிகளிலும் இத்தகைய சமூக, அரசியல் நிலைமைகள் காரணமாக ரசிகர்கள் ஆதரிக்கவோ இல்லை எதிர்க்கவோ செய்கின்றனர். ஏகாதிபத்தியங்களால் பிரிந்திருக்கும் உலகில் விளையாட்டுகள் மட்டும் ஒற்றுமையை ஏற்படுத்தி விடாது. கால்பந்து போட்டியில் அமெரிக்க அணியை ஈரான் அணி வென்றால் ஈரான் மக்கள் கொண்டாடத்தான் செய்வார்கள். ஜப்பான் அணியை சீனா வென்றால் அதன் மக்களும் கொண்டாடுவார்கள்.
ஈழப்போராட்டத்தை ஒடுக்க சிங்கள அரசுக்கு உதவியாக இருக்கும் இந்தியாவை கண்டிக்க நினைக்கும் ஒரு ஈழத்தமிழர், கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோற்க வேண்டும் என்று நினைப்பதற்கும் இதுவே காரணம். இப்படித்தான் காஷ்மீர் மக்களும் தங்களை ஆக்கிரமித்து கொன்றோ இல்லை சித்ரவதை செய்தோ நடத்தி வரும் இந்தியாவை இயல்பாக வெறுக்கிறார்கள். இங்கே இந்தியா என்பது அரசு-கட்சி-இராணுவம்-நீதி-நிர்வாக அமைப்புகளின் கட்டுமானத்தை குறிக்கிறதே அன்றி இந்திய மக்களை அல்ல.
மூவர்ணக் கொடி பறப்பது, ஜனகனமண பாடுவது, வீட்டில் பாரதமாதா படத்தை பூஜை செய்வதையெல்லாம் வைத்து தேசபக்தியை மதிப்பிடுவது பார்ப்பனிய மேட்டிமைத்தனமே அன்றி வேறல்ல. ஒருவகையில் இது அடக்குமுறைக்கான பாசிச கருத்தியலாகவும் விளங்குகிறது. உண்மையில் இந்திய தேசபக்தி என்பது அங்கு வாழும் மக்களின் துன்ப துயரங்களோடு தொடர்புடையது. அதனால்தான் காஷ்மீர் மக்களின் துயரத்தை பார்த்து நாம், ஆளும் வர்க்க இந்தியாவை கண்டிக்கிறோம்.
காஷ்மீர் இளைஞர்கள்
காஷ்மீர் இளைஞர்கள்
காஷ்மீரில் ஐந்தடிக்கு ஒரு இந்திய இராணுவத்தின் துப்பாக்கியை பார்த்து மிரண்டவாறே காலத்தை ஓட்டும் மக்களில் கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், வாழ்க்கையை இழந்தவர்கள், சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என்று ஏதாவது ஒரு பாதிப்பின்றி எவரும் இல்லை. மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் கிரமமாக தமது வாழ்க்கை வசதிகளுடன் வாழும் சூழலில் காஷ்மீரின் சூழலை பலரும் புரிந்து கொள்வதில்லை.
ஒருக்கால் தேசபக்தி வெறி கொண்டு காஷ்மீரை நடத்துவதாக இருந்தால் முழு காஷ்மீர் மக்களையும் கொன்றால்தான் பள்ளத்தாக்கை இந்தியாவோடு இணைத்திருக்க முடியும். அப்படிப் பார்த்தால் இந்தியாவில் பல மாநிலங்களில் மக்களே இருக்க முடியாது எனும் நிலையே உள்ளது. இந்நிலையில் ஒரு காஷ்மீர் மாணவன் கிரிக்கெட் போட்டியில் பாக்கை ஏன் ஆதரிப்பான் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் ‘பயங்கரவாதத்தின்’ அபாயத்தை வரவேற்கிறீர்கள் என்று பொருள்.
காஷ்மீரில் இந்திய அரசின் அடக்குமுறை மட்டுமல்ல, அதை கேடாகப் பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தானும் நிறைய தீங்கை இழைத்திருக்கின்றது. முக்கியமாக ஜனநாயக முறையில் இருந்த விடுதலை இயக்கங்களை மதவாதிகளாக மாற்றியது பாக்கின் சாதனை. என்றாலும் இந்தியா போன்று பாக் நேரடியாக காஷ்மீர் மக்களை ஒடுக்கவில்லை, இந்தியாவை அநேக நேரங்களில் எதிர்க்கிறது, போராட்டத்திற்கு உதவி செய்கிறது என்ற காரணங்களினால் காஷ்மீர் மக்களிடையே பாக் மீது ஒரு கரிசனம் இருக்கிறது.
ஈழத்தமிழ் மக்களுக்கு தமிழகத்து மக்கள் மீது அப்படி ஒரு கரிசனம் இருப்பதை இதோடு ஒப்பிட்டுச் சொல்லலாம். அதனால்தான் சிங்கள இனவெறி அரசும் கூட ஏனைய இந்தியாவை ஆதரித்தும் தமிழகத்தை எதிர்த்தும் வருகிறது. ஆகவே ஒரு இனத்து மக்கள் தமது உயிர்வாழும் உரிமைக்கு ஆதரவானவர்களோடு இணக்கம் காண்பிப்பது இயல்பானது. இதை தேசபக்தியோடு முடிச்சுப் போடுவது அயோக்கியத்தனம்.
காஷ்மீர் மக்கள் இந்தியாவோடு இருப்பதா, இல்லை பாக்கோடு இணைவதா, இல்லை தனியாக இருப்பதா என்பதெல்லாம் அவர்களுடைய சுயநிர்ணய உரிமையோடு சம்பந்தப்பட்டவை. அத்தகைய முடிவு எடுக்கும் உரிமை காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தை ஆதரிப்போர் செய்ய வேண்டிய கடமை. இதில் அவர்கள் இந்தியாவை ஆதரிக்க வேண்டும் என்று ஒருவர் நினைத்தால் அது அடக்குமுறை மூலம் சாத்தியமில்லை, அது எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பதெல்லாம் பாசிஸ்டுகளுக்கு புரிவதில்லை. துப்பாக்கிகளின் பலத்தில் வாழ்பவர்களுக்கு அன்பும், தோழமையும் சமத்துவத்தின் மூலம்தான் வரும் என்பதெல்லாம் தெரியாது.
ஆக மீரட்டில் படிக்கும் ஒரு காஷ்மீர் மாணவன் பாக் அணியை ஆதரிக்கிறான் என்பதை எளிமைப்படுத்தி புரிந்து கொள்ளாமல் அதன் சமூகப்பின்னணியை புரிந்து கொள்வதே அவசியம். ஆகையால் அது எந்தக்காலத்திலும் ஒரு குற்றமாக முடியாது. இதை இந்த அர்த்தத்தில் மட்டுமல்ல ஒரு விளையாட்டு என்ற கோணத்திலும் பார்க்கலாம்.
காஷ்மீர் மாணவியர்
காஷ்மீர் மாணவியர்
ஒரு விளையாட்டு போட்டியில் இரு நாட்டு அணிகளே போட்டியிட்டாலும் கூட ஒரு நாட்டு ரசிகன் தனது நாட்டைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. விளையாட்டை விளையாட்டாய் ரசிப்பவர்கள் எந்த நாட்டையும் ஆதரிக்கலாம், எந்த நாட்டு வீரருக்கும் ரசிகராக இருக்கலாம். இதையெல்லாம் தேசபக்தி அல்லது தேச துரோகத்தோடு முடிச்சுப்போடுவது அயோக்கியத்தனம். பொதுவில் விளையாட்டு என்பது மதம்,மொழி,இனம்,நாடு கடந்தது என்று சொல்லிவிட்டு நாடுவிட்டு நாடு ஆதரித்தால் மட்டும் தேச துரோகம் என்று சொல்பவர்களை எதைக் கொண்டு அடிப்பது?
மீரட் பல்கலைக்கழகத்தில் இந்த பிரச்சினையை வேறு முறையில் கையாண்டிருக்க வேண்டும். காஷ்மீர் மாணவர்களை தாக்கிய பிற மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் அதே காஷ்மீர் மாணவர்கள் இந்தியா மீது ஒரு புதிய நம்பிக்கையை பெற்றிருக்க கூடும். மாறாக அவர்கள் இந்தியா மீது என்ன கோபத்தை கொண்டிருந்தார்களோ அதை பல்கலைக்கழக நிர்வாகம் அதிகப்படுத்தியிருக்கிறது.
ஊடகங்களிலும் நிர்வாகத்திற்கு ஆதரவான தேசபக்தி வன்முறையின் ஒளியிலேயே இந்த செய்தி வந்திருக்கிறது. பல ஊடகங்களில் இந்த செய்தி வரவே இல்லை. தினமணியில் இந்த செய்தியை பல்கலையின் பெயர் போடாமல் போட்டுவிட்டு துணை வேந்தர் அகமதுவின் கருத்தை மட்டும் கவனப்படுத்தி போட்டிருந்தார்கள். அதாவது ஒரு இசுலாமியர்,  காஷ்மீர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக நாம் புரிந்து கொள்ள வேண்டுமான். இது குறித்து செய்தி வெளியிட்ட எந்த ஊடகங்களும் காஷ்மீர் மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட இந்த வன்முறையை கண்டிக்கவில்லை. இதுதான் இந்திய ஜனநாயகத்தின் இலட்சணம்.
என்னதான் தேசபக்தி என்று கூச்சமிட்டாலும், வல்லரசு என்று பெருமிதத்தை கடைவிரித்தாலும் ஒடுக்கப்படும் மக்கள் போராட்டத்தை எவரும் அடக்கியதாக சரித்திரமில்லை.
காஷ்மீர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்த விவேகானந்தர் பல்கலைக்கழம் மீது மாநில, மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க குரல் கொடுப்போம்.
இன்னும் புரியும் விதத்தில் சொல்வதாக இருந்தால் இந்திய அணியை தோற்கடித்த பாக் அணியின் வெற்றியை நாமும் கொண்டாடுவோம்.!

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.