வி.களத்தூர் வியாபாரிகள் சங்க தலைவர், பொருளாளரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக எஸ்பியிடம் புகார்!
பெரம்பலூர், செப். 6:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூரில் வியாபாரிகள் சங்க தலைவர் மற்றும் பொருளாளரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக பெரம்பலூர் எஸ்பிமகேஷிடம், சிறுபான்மையின வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
வி.களத்தூர் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 23, 24, 25ம் தேதிகளில் மாரியம்மன் கோயில் ஊரணி திருவிழா நடைபெற்றது. கடந்த காலங்களில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்டு வரும் பிரச்னைகளில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே இந்த திருவிழாவின் போது வி.களத்தூர் கிராமத்தில் உள்ள சிறுபான்மையின வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த அனைவரும் கடையடைப்பு நடத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவது என வி.களத்தூர் முஸ்லிம் ஜமாத்தார் முன்னிலையில் முடிவு செய்யப்பட்டது. அதேபோல் 23,24,25ம் தேதிகளில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த பலரும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 4ம் தேதி வியாபாரிகள் சங்க தலைவர் லியாகத்அலி மற்றும் துணைத்தலைவர் சர்புதீன் முன்னிலையில் ஜமாத்தார் கூட்டம் நடைபற்றது. இதில் ஜமாத்தார் எடுத்த முடிவுக்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாக கடையை திறந்த சிறுபான்மையின வியாபாரிகள் சங்க தலைவர் ஷயத்பாஷா மற்றும் பொருளாளர் சிராஜ்தீன் ஆகியோரை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறோம் அவர்களிடம் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள கூடாது. மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் கடையடைப்பின் போது வியாபாரிகள் சங்க தலைவர், பொருளாளருக்கு ஆதரவாக செயல்பட்ட முகமது தாரிக், முகமது சுல்தான், அப்துல்ஷாக், முகமது யூசூப், ஜாகீர்உசேன், இயத்துல்லா, சபியுல்லா, முகமதுரஹீம் உள்ளிட்ட 18 பேர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் கடந்த 4ம் தேதி சிறுபான்மையின வியாபாரிகள் சங்கத்தின் அவசர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இன்று (5ம் தேதி) ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவது, பிரச்னை தொடர்பாக புகார் அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி எஸ்பியிடம் புகார் அளிப்பதற்காக வி.களத்தூர் கிராமத்தில் இருந்து சிறுபான்மையின வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஷயத்பாஷா மற்றும் பொருளாளர் சிராஜ்தீன் மற்றும் உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் மதியம் 12 மணியளவில் பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
இந்நிலையில் மாதாந்திர ஆய்வுக்காக ஐஜி வர இருந்ததால் புகார் அளிக்க வந்தவர்களை எஸ்பி அலுவலகத்தில் போலீசார் அனுமதிக்காமல் மாலை 5 மணியளவில் வந்து எஸ்பியிடம் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.
இதனால் மாலை 6 மணி வரை காத்திருந்து எஸ்பியிடம் புகார் அளித்து விட்டு சென்றனர்.
வி.களத்தூர் கிராமத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்த 2 பேரை ஜமாத்தார் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி : தினகரன் .
0 comments:
Post a Comment