குடும்பக்
கட்டுப்பாடு பற்றி இஸ்லாம் சொல்வது என்ன?
பதில் :
கருவில் குழந்தை
உருவாகுவதைத் தடுப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் அஸ்ல் என்ற ஒரு
முறை இருந்தது. இல்லற வாழ்வின் போது ஆண் உச்சகட்ட நிலையை அடையும் போது தன் விந்தை
மனைவியின் கற்ப அறைக்குள் செலுத்தாமல் வெளியே விட்டு விடுவான். இம்முறைக்குத் தான்
அஸ்ல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்வதை நபிகள் நாயகம் (ஸல்)
அனுமதித்துள்ளார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களது காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் நாங்கள்
"அஸ்ல்' செய்து கொண்டிருந்தோம்.
அறிவிப்பவர் :
ஜாபிர் (ரலி)
நூல் : புகாரி (5209)
ஒரு மனிதர்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) எனக்கு ஒரு அடிமைப்
பெண் இருக்கிறாள்... அவள் எங்களுக்குப் பணிவிடை செய்கிறாள். நான் அவளிடத்தில்
உடலுறவு கொள்கிறேன். அவள் கற்பமாகி விடுவாளோ என்று நான் அஞ்சுகிறேன் என்று
கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ விரும்பினால் அஸ்ல் செய்து கொள்.
அவளுக்கென்று விதிக்கப்பட்டது அவளை விரைவில் வந்தடையும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :
ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் (2606))
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் அஸ்ல் செய்து கொண்டிருந்தோம். இச்செய்தி நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களை எட்டியது. ஆனால் அவர்கள் எங்களைத் தடுக்கவில்லை.
அறிவிப்பவர் :
ஜாபிர் (ரலி)
நூல் : முஸ்லிம் (2610)
மேலுள்ள
செய்திகளைக் கவனிக்கும் போது அஸ்ல் செய்வது தடை செய்யப்பட்ட ஒன்றல்ல என்பதை விளங்கிக்
கொள்ளலாம்.
என்றாலும் அஸ்ல்
செய்தால் கட்டாயம் குழந்தை குழந்தை உருவாவதைத் தடுத்து விடலாம் என்று நினைத்து
விடக் கூடாது. அல்லாஹ் நாடினால் ஒருவன் அஸ்ல் செய்யும் போதே அவனையறியும் மீறி சிறு
துளி கருவறைக்குள் சென்று விடலாம். குழந்தை உருவாகியே தீரும் என்று அல்லாஹ் எழுதி
இருந்தால் அதை யாராலும் வெல்ல முடியாது என்பதை மறந்து விடக் கூடாது.
நாங்கள் அஸ்ல்
செய்ய விரும்பினோம். எனவே அது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டோம்.
அதற்கு அவர்கள் அதை நீங்கள் செய்யாமல் இருந்தால் தவறேதுமில்லையே. மறுமை நாள் வரை
உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ
சயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : புகாரி (2542)
தற்காலிகமாக
குழந்தை உருவாவதை தடுத்துக் கொள்வதற்கான வழி தான் அஸ்ல் என்பது. ஆனால்
நிரந்தரமாகக் குழந்தை உருவாகாதவாறு குடும்பக்கட்டுப்பாடு செய்வது முற்றிலும்
தவறாகும். தற்காலிகக் கட்டுப்பாடான அஸ்ல் செய்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
அனுமதியளித்துள்ளதால் ஆணுறை காப்பர்டி போன்ற நவீன சாதனங்களைப் பயன்படுத்தி
தற்காலிகமாகக், குடும்பகட்டுப்பாடு செய்வதற்கு மாத்திரம் அனுமதியுள்ளது.
குழந்தை பாக்கியம்
என்பது அல்லாஹ் கொடுத்த ஒரு மாபெரும் பாக்கியம். போதுமான அளவு குழந்தைகளைப்
பெற்றெடுத்தப் பின் நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டைச் செய்யலாம் என்று பலர்
நினைக்கிறார்கள். நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டைச் செய்த பின் பெற்றெடுத்த
குழந்தைகள் விபத்தில் சிக்கி இறந்து விட்டால் மீண்டும் இவர்கள் குழந்தை
பாக்கியத்தை எப்படி பெற முடியும்?. இதைச் சிந்தித்துப்
பார்த்தாலே யாரும் நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டை செய்ய மாட்டார்கள்.
மேலும் இறைவன்
படைத்த படைப்பில் மாற்றம் செய்யக் கூடாது என்று குர்ஆன் கூறுகின்றது.
"அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு
(தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக்
கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்)
அவர்களுக்குக் கட்டளையிடுவேன்;அல்லாஹ்
வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' (எனவும் ஷைத்தான் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக்
கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான். (அல்குர்ஆன் 4 : 119)
எனவே
பெரும்பாக்கியமான குழந்தை பாக்கியத்தை நிரந்தரமாக நீக்கி இறைப் படைப்பில் மாற்றம்
செய்வது கூடாது.
0 comments:
Post a Comment