சௌதி மற்றும் அதன் பிராந்தியங்களின் பாதுகாப்பிற்கு ஏதாவது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அதற்கு பாகிஸ்தானிடமிருந்து பலமான பதிலடி கிடைக்கும் என பாகிஸ்தானின் இராணுவ தளபதி ஜெனரல் ரஹீல் ஷரிப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள சௌதி பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் முகம்மத் பின் சல்மான் பாகிஸ்தான் இராணுவ தளபதியை சந்தித்து பேசிய போதே இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டது.
சௌதி இளவரசர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபுடன் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடாத்தினார். அதன் போது இரு நாடுகளுக்கிடையிலான வரலாறு, கலாச்சார, மத ரீதியான விடயங்களில் இரு நாட்டு மக்களும் இறுக்கமான உறவுகளைக் கொண்டிருப்பதாகவும் பாகிஸ்தான் மக்கள் சௌதி அரேபியா மீது மிகந்த மரியாதை வைத்திருப்பதாகவும் அதன் மன்னர் சல்மானின் நடவடிக்கைகள் மீது மக்கள் மதிப்பு வைத்துள்ளதாகவும்சௌதி இளவரசர் சுட்டிக் காட்டினார். இதன் போது கருத்து தெரிவித்த நவாஸ் ஷரீப் சௌதி அரேபியாவின் இறைமைக்கு எதிராக வரும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கு எதிராகவும் பாகிஸ்தான் மக்கள் எப்போதும் சௌதி அரேபியாவுடன் கைகோர்த்து நிற்பார்கள் என்று தெரிவித்தார்.
சௌதி பாதுகாப்பு அமைச்சர் பாகிஸ்தானின் இராணுவ பலத்தினை மெச்சியதுடன் சௌதிஅரேபியாவுடன் பாகிஸ்தான் கொண்டுள்ள உறவின் முக்கியத்துவத்தினையும் எடுத்துரைத்தார்.
அண்மையில் ஷீஆ மதகுரு நிம்ர் அல்-நிம்ருக்கு சௌதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமையை அடுத்து ஈரானுடன் ஏற்பட்டுள்ள முருகல் நிலைமையினால் சௌதி அரேபியா மற்றும் அதனது கூட்டணி நாடுகள் ஷீஆ ஆதிக்க நாடான ஈரானுடனான ராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அல்லது குறைத்துக் கொள்வதாக அறிவித்தபின்பே சௌதி பாதுகாப்பு அமைச்சரின் இந்த பாகிஸ்தான் விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment