Comments

தமிழக செய்திகள்

சகாயம் ஐஏஎஸ்-க்காக சென்னையில் குவிந்த கூட்டம்!

மூக வலை தளங்களை வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் பயன்படுத்திய இளைஞர்களை விழிக்கச் செய்துவிட்டது இந்த மழை.  நாடெங்கும் இளைஞர்களின் உதவிக்கரம் இணைய‌ம் மூலம் ஒன்று சேர்ந்தது. இப்படி ஓர் இளைஞர் சக்தியை வேறு  எங்கும் பார்த்ததில்லை என ராணுவமே சிலிர்த்தது. அதேபோல், அ.தி.மு.க.வின் ஸ்டிக்கர் முகத்தையும் கிழித்து தொங்க விட்டனர்.
அதேவேளையில், ஆட்சி மாற்றம் கூடாது, அரசியல் மாற்றம் வேண்டும் என போஸ்ட்களும், மீம்ஸ்களும் தெரித்தன. லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்தி நேர்மைக்காக எத்தனையோ இன்னல்களை சந்தித்த சகாயம் ஐ.ஏ.எஸ் நாட்டை ஆள வேண்டும் என குரல்கள் ஒலிக்க துவங்கின. இணையம் எங்கும் ஆதரவு திரள, இந்த குரலை சகாயம் செவிக்கு எடுத்து செல்ல களத்தில் இறங்கினர்.
அதன்படி இன்று (20-ம் தேதி) காலை 10 மணி அளவில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு அருகில் இருந்து பேரணியாக செல்ல, வெள்ளை உடையில் அணி திரளும் படி பதிவுகள் ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்ஆப்பிலும், பிற சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டன.
கூட்டமாக மாறிய பேரணி

சுமார் 1500 பேர் வருவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்தார்கள் நிகழ்ச்சியை எற்பாடு செய்து இருந்த அமைப்பினர். ஆனால், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து இந்த பேரணியில் கலந்து கொண்டனர். இதனால் பின்னி ரோடு வரை எற்பாடு செய்யப்பட்டு இருந்த பேரணி ரத்து செய்யப்பட்டு, கூட்டமாக மாற்றப்பட்டது.
அதேபோல் இளைஞர்களை மட்டுமின்றி, 6 வயது முதல் 60 வயது வரையிலான மக்களும் இதில் கலந்து கொண்டனர். அனைவரின் முகத்திலும் ஒரு ஊழலற்ற நல்லாட்சி அமைய வேண்டும் என்ற ஏக்கம், கோஷமாக எதிரொலிக்கத் தொடங்கியது. சிறுவர்கள் கூட மாற்றத்தை எதிர்நோக்கி பலகையை பிடித்தப்படி கூட்டத்தில் நின்றனர்.
அமைதியான முறையில் நடந்து கொண்டிருந்த கூட்டத்திற்குள், திடீரென ரோஸ் நிற துண்டு அணிந்த சிலர் புகுந்து, எதிரான கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர்.

கூட்டத்தில் பங்கேற்ற சிலரிடம் பேசியபோது, ''40 வருஷமா மாறி மாறி தமிழ்நாட்டை சூறையாடினது போதும். இனிமேலாவது தமிழ்நாடு உருப்படணும். நேர்மையான இளைஞர்கள் கையில் நாடு போகணும். அப்படி நம்ம கண்ணு முன்னாடி இருக்குற ஒருத்தர்தான் சகாயம்.
இந்த கூட்டம் காசுக்காகவோ அல்லது பிரியாணிக்காகவோ சேர்ந்த கூட்டம் இல்லை. மாச கணக்காக போஸ்டர் அடிச்சு கூட்டின கூட்டம் இல்லை. வெறும் 4 நாட்கள்ல சேர்ந்த கூட்டம். அதுவும் அரசியல்ல இருக்குற ஒருத்தருக்காக இல்லை.அரசியலுக்கு ஒருவர் வரணும் என்பதற்காக என்றனர்.
சகாயம் ஐயா எங்கள காப்பாத்த வாங்க.. தயவு செஞ்சு வராமல் மட்டும் இருந்துடாதீங்க...!

-பி.நிர்மல்

படங்கள்: க.சர்வின்
(மாணவ பத்திரிகையாளர்கள்)

About QUILLERZ TRENDZZ

0 comments:

Post a Comment

Powered by Blogger.