சென்னை: தமிழகத்தில் 90 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவான மையங்களில் தேர்தல் பார்வையாளர்கள் சோதனை செய்வார்கள். சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அந்த வாக்குப்பதிவு மையங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார். தமிழகத்தில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குபதிவு நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் நிலவரங்கள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் நேற்று இரவு 8.30 மணிக்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் நேற்று நடந்த தேர்தலில் 72.83 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதில் அதிகபட்சமாக தர்மபுரியில் 80.99 சதவீதம் வாக்கு பதிவானது. குறைந்த அளவாக தென்சென்னையில் 57.86 வாக்குகள் பதிவு ஆகியுள்ளது. தபால் ஓட்டும் சேர்க்கப்படுவதால் நாளை (இன்று) தான் இறுதி வாக்குப்பதிவு விவரம் தெரிய வரும். கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதால் கடந்த தேர்தலுடன் இந்த தேர்தலை ஒப்பிட்டு பார்க்கும் போது அதிகம் பேர் வாக்களித்ததாகவே கூறலாம். பொதுவாக தமிழகத்தில் அமைதியாக தேர்தல் நடந்தது. எந்த வாக்குப்பதிவு மையத்திலும் பிரச்னை காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்படவில்லை. தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் சென்னையில் வோல்டாஸ், டி.சி.எஸ்., எச்.சி.எல்., விப்ரோ உள்ளிட்ட 10 ஐ.டி. நிறுவனங்கள் விடுமுறை விடாமல் இருந்தனர். அந்த நிறுவனங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் சென்று ஊழியர்களுக்கு விடுமுறை சொல்லி அனுப்பி வைத்தனர். அந்த 10 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது நல்ல பயன் கிடைத்து. இதன் மூலம் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மன நிறைவு அடைந்தனர். இதன் மூலம் பணப்பட்டுவாடா பெருமளவில் குறைக்கப்பட்டது. தமிழகத்தில் 90 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவான மையங்களில் இன்று (நாளை) தேர்தல் பார்வையாளர்கள் சோதனை செய்வார்கள். சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அந்த வாக்குப்பதிவு மையங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் 42 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.
அங்கு 3 கட்ட போலீஸ் பாதுகாப்பு இருக்கும். வேட்பாளர்கள் ஏஜெண்ட்களும் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். அந்த அறைக்குள் யார் சென்றாலும் வீடியோவில் பதிவு செய்யப்படும். கடந்த 2 நாளில் மட்டும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பணம் கொடுத்ததாக புகைப்பட ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்துக்கு புகார் வந்துள்ளது. அவர்கள் மீது ஒரு சில நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
விஜயகாந்த் மீது நடவடிக்கை
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மின்னணு இயந்திரத்தில் வாக்களிக்க முயன்ற போது அவரது மனைவி அருகில் வந்து ஏதோ கூறியதாக புகார் கூறப்படுகிறது. இது குறித்து அந்த வீடியோ பதிவுகளை பார்த்தபிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.
0 comments:
Post a Comment