இந்திய பெருங்கடலில், சீன ஆதிக்கம், ஊடுருவல் தடுக்கும் வகையில், தஞ்சை விமானப்படைக்கு, புதிய வரவாக, எந்த அபாயத்தையும் சமாளிக்கவல்ல, 'குளோப் மாஸ்டர் சி 17' ரக விமானம், தரையிறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கோவை அருகே சூலூர், சென்னை அடுத்த தாம்பரம் என, இரு விமானப்படை தளங்கள் செயல்பட்டு வந்தன. இதையடுத்து, மூன்றாவதாக, புதிய விமான தளம், தஞ்சாவூரில், 150 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.இது, போர் விமானங்களை நிறுத்தும் வகையில், அதிநவீன ஓடுபாதையுடன் கூடிய முதல் விமானப்படை தளமாக விளங்குகிறது.
கடந்த, 2012ம் ஆண்டில், ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட, மணிக்கு, 3,200 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடிய, 18 சூப்பர்சானிக், 'சுஹாய்' ஜெட் ரக விமானங்கள், தஞ்சையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து, பெருங்கடல் பகுதியை விரைந்து அடையவும், கண்காணிக்கவும் முடியும் என்பதால், தஞ்சை படைத்தளத்துக்கு, விமானப்படையும், மத்திய ராணுவ அமைச்சகமும், மிகுந்த முக்கியத்துவம் தரத் துவங்கியுள்ளன.இதன்படி, தஞ்சை விமானப்படைத் தளத்துக்கு புதிய வரவாக, 'குளோப் மாஸ்டர் சி 17' ரக, ராட்சத சரக்கு விமானம், கடந்த, 5ம் தேதி தரையிறங்கியது. பாதுகாப்பு காரணங்களால், இதன் விவரத்தை வெளியிடாமல், விமானப்படை அதிகாரிகள் ரகசியம் காத்தனர்.தகவல், நேற்று வெளியானதைத் தொடர்ந்து, புதிய, 'குளோப் மாஸ்டர் சி 17' ரக சரக்கு விமானத்தின் சிறப்பம்சம் குறித்து, தஞ்சை விமானப்படை தளபதி குரூப் கேப்டன் கே.வி.எஸ்.என்.மூர்த்தி கூறியதாவது:
தஞ்சை படைத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ள, 'குளோப் மாஸ்டர் சி 17 ' ரக சரக்கு விமானம், கடந்த 5ம் தேதி இரவு, 7:00 மணிக்கு தரையிறங்கியது. இவ்விமானம், 2013ம் ஆண்டு தான், இந்திய விமானப்படையில் புதிதாகச் சேர்க்கப்பட்டது. இது, அமெரிக்கா நாட்டின் தயாரிப்பு. பெரிய சரக்கு விமானம் என்பதால், அதிக கொள்ளளவில் வீரர்களையும், போர் தளவாடங்களையும், அவசர காலங்களில், துரிதமாக, குறைவான நேரத்தில் சென்று சேர்க்க முடியும்.ஒடிசாவில், புயல் சேத இடங்களில், நிவாரண பொருட்களை அளிக்க உதவியது. 70 டன்னுக்கும் அதிகமான எடையையும் சுமந்து, உயர்ந்த மலை உச்சியிலும், தரை இறங்கக் கூடியது. குறிப்பாக, இந்திய பெருங்கடல் பகுதியில், 'குளோப் மாஸ்டர் சி 17' விமானத்தின் பங்கு, மிகுந்த பயனளிக்கும் வகையில் இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
0 comments:
Post a Comment